பாலியல் வன்கொடுமை - பட்டியல்

சாணக்யா  avatar   
சாணக்யா
 
பாலியல் வன்கொடுமை - பட்டியல்

- சரளா தேவி சாயிநாதன் -

எந்த ஒரு நாட்டிலும் பாலியல் வன்கொடுமை நடக்கும் பொழுது, பாதிக்கப்பட்டது யார்? அவருக்கு என்ன வயது? என்ன செய்கிறார்? எங்கு இருக்கிறார் போன்ற தகவல்களும், குற்றம் செய்தது யார்? அவருக்கு என்ன வயது? என்ன செய்கிறார்? எங்கு இருக்கிறார் போன்ற தகவல்களும் தான் பேசப்படும். ஆனால், இந்தியாவில், முக்கியமாக தமிழ்நாட்டில், பாலியல் வன்கொடுமை நடந்தால் கேட்டகப்படும் முதல் கேள்வி - பாதிக்கபட்டவர் எந்த மதம், எந்த ஜாதி? குற்றம் செய்தவர் எந்த மதம்? எந்த ஜாதி? குறிப்பாக, குற்றம் செய்த நபருக்கு அரசியல் பின்புலம் இருக்கிறதா என்ற கேள்விகள் தான்.

இங்கு, ஒவ்வொரு ஜாதிக்கும், மதத்திற்கும் ஏற்ப, பாலியல் வன்கொடுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதை விட மிகவும் முக்கியம், குற்றம் செய்தவர், ஆளும்கட்சியை சேர்ந்தவரா? எதிர்க் கட்சியை சேர்ந்தவரா? என்பதை பொறுத்து தான், ஊடகங்கள் அந்த சம்பவத்தை பேசுபொருளாக்கும். குற்றம் செய்தவர் ஆளும் கட்சியை சேர்ந்தவராய் இருந்து, அதிலும் ஏதாவது பதவியில் இருந்துவிட்டால், அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கிடைப்பது கேள்விக்குறிதான். அந்த மாதிரி நிகழ்வுகளை, பெரும்பாலும் ஊடகங்கள் பேசாது. அதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவராய் இருந்தால், அனைத்து ஊடகங்களும் விழித்துக்கொள்ளும். சட்டசபையிலிருந்து, டீ கடை வரை அந்த சம்பவம் தான் பேசப்படும்.

சமீபத்தில், பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு வெளியானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியை விட, அந்த தீர்ப்பின் வெற்றியை, எந்த கட்சி கொண்டாட வேண்டும் என்பதில் தான் இரு கட்சிகளும் முனைப்பாக இருந்தன. 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அந்த வழக்கு முக்கிய இடம் பிடித்தது. அப்பொழுது பெண்கள் பாதுகாப்பு பற்றியும், அவர்கள் நலன் குறித்தும், பேசியவர்களுக்கு, அதன் பின் நடந்த கொடுமைகளை நினைவுபடுத்த வேண்டியது அவசியம்.

தமழ்நாடு காவல் துறையின், அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆண்டு வாரியாக குற்ற சம்பவங்களின் தரவுகள், பதிவேற்றப்பட வேண்டும். ஆனால் அந்த இணையதளத்தில், 2022 வரை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, 2021ஐ விட, 2022ல், 4.8 சதவிகிதம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2021ல் மொத்தம் 3,855 பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2022ல் 4,041 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதில், POCSOவில் மட்டும் 3,620 வழக்குகள்.

2023 மற்றும் 24 ஆண்டுக்கான, பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்து தேடும் பொழுது, நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைக்கும் தகவல், 2023ஆம் ஆண்டில் 3,407 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டில் 5,319 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கின்றன. Pபோக்சோ சட்டத்தின் கீழும், வழக்குகள் அதிகரித்துள்ளன - 2023 இல் இது 1,174 ஆக இருந்த நிலையில், 2024 இல் 1,650 ஆக உயர்ந்துள்ளது. 2022 உடன் ஒப்பிடும்போது, ​​2023 இல் இரு பிரிவுகளிலும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அப்படியே, 2020 முதல் தற்பொழுது வரை நடந்த, கொடுமையான கூட்டு பாலியல் வன்கொடுமைகளில், வெளியே தெரிந்து பேசுபொருளான சில வழக்குகள் குறித்து பாரபார்க்கலாம்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர், தனது சக டாக்டருடன் 2022 மார்ச் 16-ம் தேதி இரவு, காட்பாடியில் உள்ள திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து, ஆட்டோவில் வேலூருக்குச் சென்றபோது, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் இருந்தவர்கள், இருவரையும் கத்தி முனையில் கடத்திச் சென்று, ஆண் டாக்டரை தாக்கிவிட்டு, பெண் டாக்டரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கு, வேலுார் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா, குற்றவாளிகளுக்கு தலா, 20 ஆண்டுகள் சிறை மற்றும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சிறுவனுக்கும், 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.23 ஆயிரமும் அபராதம் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அரசியல் ஆதாயம் எதுவும் இல்லாததால், எந்த ஒரு கட்சியும் இந்த சம்பவம் குறித்து பெரிதாக பேசவில்லை.


அதே 2020ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே இருக்கும், நைனார் குப்பம் கிராமத்தில், சசிகலா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு இரண்டு சகோதரர்கள் தான் கரணம் என குற்றம்சாட்டப்பட்டது. அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டி, பல நாட்களாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த இரண்டு பேரில் ஒருவர், திமுக இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகி. பொள்ளாச்சி விவகாரத்தை பேசியது போல, எத்தனை ஊடகங்கள் இந்த சம்பவம் குறித்து பேசின என்பது கேள்விக்குறியே.

2022ல், விருதுநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண், தன் காதலன் என்று நம்பியவனால், அவனது நண்பர்களுடன் சேர்ந்து, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டார். அந்த பெண்ணும், அவள் காதலன் என்று நம்பியவனும், நெருக்கமாக இருந்த விடியோவை வைத்து அந்த கொடூரன் அந்த பெண்ணை மேலும் 8 பேருக்கு இரையாக்கினான். இதில், தி.மு.க., வார்டு இளைஞரணி அமைப்பாளர் ஜூனத் அகமதும் ஒருவர் என்பது கூடுதல் தகவல். இதில் ஆளும் கட்சியை சேர்ந்த நபர் ஒருவரும், குற்றவாளியாய் இருந்ததாலோ என்னவோ, இந்த வழக்கு, சில ஊடகங்களில் மட்டும் பேசப்பட்டது.

2024 ஆகஸ்ட் மாதம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், 22 வயது இளம் பெண்ணை, அந்த பெண் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, 4 பேர், பாலியல் வன்கொடுமை செய்தனர். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, சரியாக விசாரிக்காமல், மருத்துவமனைக்கும், காவல் நிலையத்திற்கும் அலைக்கழித்து உள்ளனர். இறுதியாக, ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையம் தான் அந்த பெண்ணின் புகாரை ஏற்று, அந்த பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பியது.

2024 ஆகஸ்ட் மாதம், 10 வயதே ஆன அண்ணாநகரை சேர்ந்த சிறுமி, அவர்கள் வீட்டிற்கு தண்ணி கேன் போட வரும் நபரால் பல முறை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பெருங்கொடுமை என்னவென்றால், காவல் துறை அதிகாரியே, அதிமுக பிரமுகர் உதவியுடன் குற்றம் செய்தவரை தப்பிக்கவைக்க முயற்சித்தது தான். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அதில், அந்த காவல் துறை அதிகாரி, சிறுமியின் பெற்றோரை தாக்கியதும், வழக்கை திசை திருப்ப முயற்சித்த தும், மனநல ஆலோசகர் இல்லாமல் சிறுமியை விசாரித்ததும் தெரியவந்தது. ஒரு அதிமுக பிரமுகர், குற்றவாளியை காப்பாற்ற முயன்றார் என்று தெரிந்த பிறகு தான், இந்த வழக்கும் பேசுபொருளானது.

டிசம்பர் 23. 2024, அண்ணா பல்கலை கழக வளாகத்திலியே, நண்பருடன் இருந்த ஒரு பெண்ணை, ஞானசேகரன் என்ற நபர், பாலியல் வான் கொடுமை செய்தார். சென்னையின் பிரதான இடத்தில, அதுவும் பல்கலை கழக வளாகத்தில் நடந்த இந்த கொடுமை, தமிழகம் முழுவதும் பேசுபொருளானது. காரணம், குற்றம் செய்த ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரம் மற்றும் காவல் நிலையத்தில் அவர்கள் கொடுத்த FIR தகவல் வெளியில் கசிந்தது, தொழில் நுட்ப கோளாறு என்று சொல்லப்பட்டது.

பொள்ளாச்சி தீர்ப்பை, ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, அரக்கோணத்தில் கல்லூரி மாணவி ஒருவர், ஒரு திமுக பிரமுகர் மீது பரப்பான குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண்ணின் புகாரை, அங்குள்ள காவல் நிலையங்கள், பதிவு கூட செய்யவில்லை. அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவை சேர்ந்த ரவியிடம், அந்தப் பெண் முறையிட்டார். உடனே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியே இதுபற்றி பேசினார்.

இப்படி ஒவ்வொரு குற்றவாக்கும் அரசியல் பின்னணியை போர்த்து தான் வெளிச்சம் பெறும் போல.

No comments found