திருவள்ளுவர் ஜெயந்தி என்பது நான் பள்ளியில் படித்த காலத்தில் எனக்குத் தெரியாது. ஆனால் வைகாசி அனுஷத் திருநாளில் தமிழக ஆளுநர் திருவள்ளுவர் ஒரு 'சனாதனி' என்றார். (போன வருடம் திரு ஆர்.என் ரவி அவர்கள் சனாதன தர்மத்தின் வேர் என்றார்)
திருக்குறள் எழுதியது 'ஒரு ஹிந்து' என்பதைத் திராவிடக் கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. "ஐயோ அவருக்குக் காவி ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார்கள்" என்று ஸ்டிக்கர் ஒட்டுபவர்களே கதறுகிறார்கள். அவர்கள் ஜெலுசிலை விழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
'வள்ளுவருள்ளம்' என்று ஸ்ரீ ரா. கேசவ அய்யங்கார் (ராமஜன்ம பூமி வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன் அவர்களுடைய தந்தை) ஒரு மிக அருமையான புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் பல விஷயங்களை அவர் எடுத்துக்காட்டுகளுடன், வள்ளுவர் ஒரு வைணவர்தான் என்பதைத் தக்க சான்றுகளுடன் 450 பக்கங்களில் விளக்கியுள்ளார். நான் அவற்றையெல்லாம் இங்கே சொல்லப் போவதில்லை.
திருவள்ளுவர் யார் என்பதை அறிந்துகொள்ளக் காமத்துப்பாலில் ஒரே ஒரு குறள் போதும்.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
இதற்கு மு. கருணாநிதி அவர்களின் உரை இது: "தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?"
இதை 'தாமரைக் கண்ணான் உலகு' என்று அப்படியே கடந்து செல்கிறார். (வெறு வழியில்லை).
இந்தத் தாமரைக் கண்ணான் உலகு என்பது என்னவென்று நம்மாழ்வார் கூறுகிறார்:
"முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே"
நம்மாழ்வார் திருவாய்மொழி (7.2.11) பதிகத்தை முடிக்கும்போது, இந்தப் பத்துப் பாசுரங்களைப் பாடினால், முகில் வண்ணனாக இருக்கின்ற வைகுண்டத்தில் நித்தியசூரிகள் சூழ்ந்திருக்க அந்தப் பேரின்ப வெள்ளத்தில் அவர்கள் திளைப்பார்கள் என்கிறார்.
இந்தப் பேரின்ப வெள்ளத்தைத்தான் திருவள்ளுவர் 'தாமரைக் கண்ணான் உலகு' என்கிறார்.
நம் வீட்டுக் குழந்தை பாடும்போது, 'ஆஹா என்ன அருமையாகப் பாடுகிறது! எம்.எஸ். தோற்றா!' என்று பாராட்டுவது போல, இங்கே:
"வள்ளுவர் தாம் விரும்பும் காதலியின் மென்தோள்களில் உறக்கம் கொள்ளும் இன்பத்தைவிடவா இனியது தாமரைக் கண்ணான் உலகு? என்று காதலன் மகிழ்கிறான்" என்கிறார்.
-சுஜாதா தேசிகன்
1.6.2026