- Subha Lakshmi Pazhani -
பாரதத்தில் ‘பெண்கள் மேம்பாடு’ என்பதை, ஒரே ஒரு காரணியால் முடிவு செய்துவிட முடியாது. இடம், கல்வி, சமூகம், வயது போன்ற பல அடிப்படை அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் பெண்கள், இன்றும் புறக்கணிக்கப்பட்ட கூட்டமாகவே உள்ளனர். இதன் விளைவாக ஏற்றத்தாழ்வு, பொருளாதார சார்பு நிலை, ஒடுக்குமுறை மற்றும் பல்வேறு சமூக தீமைகளின் இரையாக, பெண்கள் உள்ளனர்.
‘பெண்கள் மேம்பாடு’ என்பது வெறும் சம உரிமை என்ற வார்த்தையில் முடிந்து விடுவதில்லை. கல்வி, தெளிவான கொள்கை, மக்கள் விழிப்புணர்வு போன்றவை, பெண்களின் வாழ்வை உயர்த்தும் கருவியாக உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா “women welfare” என்ற பாரம்பரிய அணுகுமுறையில் இருந்து அடுத்த கட்டமாக “women led developments” என நகர்ந்துள்ளது . முன்பு அரசாங்கம், அவர்களுடைய உதவி மற்றும் பாதுகாப்பில் மட்டுமே கவனம் செலுத்தியது, ஆனால் இப்போது, பொருளாதார உள்ளடக்கம், தொழில்முனைவு, சுகாதாரம், விளையாட்டு, அறிவியல், நிர்வாகம் என பல்வேறு துறைகளில் பெண்களை சாதனையாளர்களாக்கியுள்ளது.
இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, நிதர்சனத்தில் தமிழகம் காட்டும் பெண்களின் நிலை வேறு… சுயமரியாதை இயக்கத்தால் ஊறி வளர்ந்த தமிழ்நாடு, இன்று, இல்லத்தரசிகளின் தற்கொலையில், நம்பர் 1 இடத்தில் உள்ளது. 2024ஆம் ஆண்டின் தேசியக் குற்ற ஆவணக் காப்பக (NCRB) அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் 2,821 இல்லத்தரசிகள் தற்கொலை செய்துள்ளனர். குடும்பத்தில் அங்கீகாரம், உரிமை என பல அடிப்படை காரணங்களால் சூழ்ந்த இந்த தற்கொலைகளை, வெறும் எண்கள் என்று கடந்து செல்ல இயலாது. இவை அனைத்திற்கும், பெண்களின் பொருளாதார நிலையும் ஒரு அடிப்படை காரணமாக உள்ளது. பெரும்பாலுமான இல்லத்தரசிகள், பொருளாதார ரீதியாக பிறரையே சார்ந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு, இலவச வங்கி கணக்கு, வங்கி கடன், “பெண்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள், பெண்குழந்தைகளை காப்பாற்றுங்கள்", இலவச கழிப்பறை போன்ற பல திட்டங்களை கொண்டு, பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினாலும், 2024 ஆண்டிற்கான தேசிய குடும்ப நல ஆய்வின்படி (NFHS) பார்த்தால், குடும்பங்களில் பெண்களின் சொத்துரிமை பங்கு, வெறும் 18.8% ஆகவே உள்ளது.
அரசால் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க முடியும்; பெண்களுக்கு இலவச கல்வி கொடுக்க முடியும்; வங்கி கணக்கு திறந்து கொடுக்க முடியும்; கடன் கொடுக்க முடியும்; இது அனைத்தும் அரசாங்கத்தின் திட்டத்தால் சாத்தியம்; ஆனால், பெண்கள் பெயரில் சொத்து, அவர்களின் வருமானத்தில் சம உரிமை, குடும்பத்தில் அங்கீகாரம் போன்றவை, நம் மனநிலை சார்ந்தவை, அது சமூக விழிப்புணர்வால் மட்டுமே சாத்தியம்.
சமீபத்தில் அருவருப்பை கிளப்பிய ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒன்றின், “370 ரூபாய் பிரியாணி” முதல்,தமிழகத்தில் நடந்த 2,821 இல்லத்தரசிகளின் தற்கொலை வரை, பெண்களின் நிலை, அடிப்படையிலேயே ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
அரசாங்கம் பல திட்டங்களை கொண்டு வந்தாலும் சமூகம் பிரதிபலிக்கும் எண்(ணங்)களை மாற்ற முடியுமா?!