இது தான் சார் அந்த குண்டர் சட்டம்
குண்டர் சட்டத்தின் கீழ் கைது என்றாலே அதில் பரபரப்பு அதிகம் காணப்படும்.
2023 -ல் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த அரசை எதிர்த்த விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர் எதிர்க்கட்சி மற்றும் மக்களின் அழுத்தத்தால் ரத்து செய்யவும் பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டாலும் சமீபத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களில் பல விமர்சனங்களை கண்டு வருகிறது.
1982ல் எம்ஜிஆர் தலைமையிலான அரசு, தொடர் குற்றவாளி மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளை அடக்குவதற்காக குண்டர் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம் இயற்றப்பட்டபோது ஐந்து வகை குற்றங்களை மட்டுமே உள்ளடக்கியது - வழிப்பறியில் ஈடுபடுவது, சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வது மற்றும் கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் தான் இதில் இருந்தது. பின்னர் ஒவ்வொரு திருத்தத்திலும், ஒரு புதிய குற்றம் இதன் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வன குற்றவாளிகள், திருட்டு வீடியோ விற்பனையாளர்கள் , மணல் திருடர்கள், சைபர் மற்றும் பாலியல் குற்றவாளிகளும் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சட்டத்தின் முழுமையான பெயர், 'சட்டவிரோத மது தயாரிப்பாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வன்முறையாளர்கள், சட்டவிரோத பொருள் கடத்தல்காரர்கள், நில அபகரிப்பாளர்கள் தடுப்புச் சட்டம். சுருக்கமாக, 'வன்முறையாளர் தடுப்புச் சட்டம்'. இந்த வன்முறையாளர்களை 'குண்டர்கள்' என்று எளிமையாகச் சொல்லி, 'குண்டர் சட்டம்' என்றே இந்தச் சட்டம் அழைக்கப்படுகிறது.
சட்டத்தின் செயல்பாடுகள்
பொது சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஓராண்டு வரை தடுப்புக்காவலில் வைக்க இச்சட்டம் அனுமதிக்கிறது. குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவரை காவலில் வைப்பதற்கான பரிந்துரை, பொதுவாக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இருந்து வந்தாலும், தடுப்பு காவல் ஆணையை அனுப்புவதற்கான இறுதி அதிகாரம், மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் மாநகரங்களில் காவல்துறை ஆணையர்களிடம் தான் உள்ளது. மேலும் இது தொடர்பான காரணங்களை உடனடியாக மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது. தடுப்பு காவல் உத்தரவு, ஒவ்வொரு மூன்று மாதமும் நீட்டிக்கப்பட்டு அதிகபட்சமாக 12 மாதம் வரை நீட்டிக்கலாம்.
1982 சட்டத்தின் பிரிவு 3 (3) -ன் படி 12 நாட்களுக்கு மேல் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அத்தகைய தடுப்பு காவல் உத்தரவு, ரத்தாகும் என்றும் உள்ளது.
சட்டத்தின் தன்மை
சட்டத்தின் பிரிவு 2(f)-ன் கீழ் “குண்டா” என்ற வார்த்தை இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது 2014-ல் நடந்த இரண்டாவது திருத்தத்தில் “habitually” (பழக்கமான) என்ற வார்த்தை, வரையறையிலிருந்து நீக்கப்பட்டது. இதன் மூலம் குண்டர் சட்டம், முதல் முறை குற்றவாளிக்கும் பொருந்தும்.
மேலும் பிரிவு 5A , ‘பல காரணங்களின் அடிப்படையில்' தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து, அந்த காரணங்களில் ஏதேனும் ஒன்று தெளிவற்றதாகவோ அல்லது பொருத்தமற்றதாகவோ காணப்பட்டால், அதனால் குண்டர் தடுப்புச் சட்டம் செல்லாது என்று கூற முடியாது’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.
2022 திருத்தத்தில் குண்டாஸ் கைதி அவரின் தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மனைவி, கணவன், மகன் மற்றும் மகள் போன்ற நெருங்கிய உறவினர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கொண்டுவரப்பட்டது.
ஒரு தனி நபரின் நடமாடும் சுதந்திரத்தை இது பறிப்பதால், அவரை போதிய காரணமின்றி காவலில் வைக்காமல் இருப்பதை உறுதி செய்ய, போதுமான சந்தர்ப்பங்களை சட்டம் வழங்குகிறது. பிரிவு 9 -ன் படி ஒரு தலைவர் மற்றும் தற்போதைய அல்லது ஓய்வு பெற்ற இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தகுதி உள்ளவர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு தடுப்பு காவல் உத்தரவும் மூன்று வாரங்களுக்குள் ஆலோசனைக் குழுவின் முன், கைதியின் தரப்பு (ஏதேனும் இருந்தால்) சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த ஆலோசனை குழு, தடுப்பு காவலின் காரணங்களை ஆராய்ந்து, தேவைப்பட்டால் கைதியின் கருத்தை கேட்டு, தடுப்பு காவல் சரிதானா என்ற முடிவுக்கு வரும். காவலில் வைக்கப்பட்டு 7 வாரங்களுக்குள் ஆலோசனை குழு, கருத்தை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
கைதிகளின் சந்தர்ப்பங்கள் இத்துடன் முடியவில்லை. தடுப்பு காவலில் ஆலோசனை குழு கண்டறிந்த காரணங்கள் கைதிக்கு எதிராக இருந்தால், கைதி அல்லது அவரின் நெருங்கிய உறவினர்கள், ஆட்கொணர்வு மனு மூலம் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யலாம்.
குண்டர் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்பு காவல் உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுவால் நிரம்பி வழிகிறது. தடுப்பு காவல் உத்தரவுகளில் பெரும்பாலானவை ஏதோ ஒரு காரணத்தினால் ரத்து செய்யப்படுகிறது.
பிரிவு 14, தடுப்பு காவல் உத்தரவுகளை எந்த நேரத்திலும் திரும்ப பெற அல்லது மாற்றியமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டத்தில் ‘அதே நபருக்கு’ எதிராக மற்றொரு தடுப்பு காவலை வழங்குவதற்கு, ரத்து செய்யப்பட்ட தடுப்பு காவல் உத்தரவு அல்லது காலாவதியான உத்தரவு, ஒரு தடையாக இருக்காது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குண்டர் சட்டத்தை கையில் எடுத்த மாநில அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக, வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை சட்டம் தெளிவுபடுத்துகிறது.
-Subha Lakshmi Pazhani